Breaking News

அர்த்தமுள்ள இந்து மதம்

ஆடிச் செவ்வாய் விரதமும் அதன் மகிமையும்
“ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி”தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம் இராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன் சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டினுள் சஞ்சரிப்பதால் (ஒன்று சேருவதால்), சந்திரன் ஆழுமைப் பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலம் அதிகரிக்கின்றது. ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்.தமிழ் ஆண்டின் 4வது மாதமான ஆடி, தட்ஷிணாயனப் புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. அதாவது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம் எனவும், தை முதல் ஆனி முடிய உத்திராணயன புண்ணிய காலமாகவும் கருதப்படுகிறது.தட்சிணாயன புண்ணிய காலம் என்பது தேவர்களின் இரவு நேரம் என்று இந்துமத புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் பகல் பொழுது குறைவாக இருக்கும். பலத்த காற்றும்,வெயில் குறைந்தும், மழைச்சாரலும் இருக்கும்.ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது காலம் காலமாக இருந்து வருகிறது. சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி இம்மாதத்தில் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4:30 மணிவரை உள்ள காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி இராகுவாக அவதாரம் செய்தார் என்றும் கூறுவர்.
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூசைகளில் பங்குபற்றி வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது.விவாகமான பெண்கள் தம் கணவனின் (பிரச்சனை உள்ளவர்கள்) குறையாத அன்பைப் பெறவும், (என்றும் அர்த்தநாரீஸ்வரியாக இருக்கவும்), மாங்கல்யம் நிலைக்கவும், மணமாகாத மகளீர் நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும், செவ்வாய் தோஷம், நாகதோஷம் நிவர்த்திக்காகவும் இவ் விரத்தை அனுஷ்டிக்கின்றனர்.இவ் விரதத்தை இலங்கையில் உள்ளவர்கள் மற்றைய (வெள்ளிக்கழமை) விரதங்களைப் போன்று எண்ணெய் வைக்காது தோய்ந்து விரதம் பிடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால்; இந்தியாவில் ஆடிச் செவ்வாய் விரதத்தை புரட்டாத்திச் சனி விரதம்போல் என்ணெய் வைத்து, சந்தனம் பூசி தோய்ந்து விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாக உள்ளது.”ஆடிச் செவ்வாய் தேடிக்குளி” என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. காரணம்; செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை (கஷ்டத்தை) ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய், சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் எம்மைத் தீவிரமாக தாக்குகின்றன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். தீய கிரகங்களில் இருந்து வரும் கதிர்களை நல்லெண்ணையில் (எள் எண்ணை) சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு என யூகிக்க முடிகின்றது.
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.அம்பிகையின் தோற்றங்களும் வழிபாடும் : அன்னை ஆதி பராசக்தியை மக்கள் எப்படி எல்லாம் வழிபடுகிறார்கள் அவள் எப்படி எல்லாம் காட்சி தருகிறாள் என்பதை சிறிது காண்போம் அன்னை ஒன்பது வடிவமாக அன்பர்களால் பார்க்க படுகிறாள் அன்னையின் இந்த ஒன்பது வடிவங்களுக்கும் தனித்தனி தத்துவங்கள் உள்ளன.முதலாவது உருவம் மனோன்மணியாகும் இதன் தத்துவம் பக்குவப் பட்ட ஜீவாத்மாக்களின் பாவங்களை கழுவி கழைந்து பரமாத்மாவோடு இணைப்பதாகும்.இரண்டாவதாக சொல்லப்படும் சர்வ பூதாமணி என்ற உருவத் தோற்றம் உயிர்களோடு ஒன்றி கலந்து அதன் பாவங்களை விலக்குவதாகும்.மூன்றாவது பூமியில் விஷ சத்துக்கள் பெருகாமல் சூரிய சக்தியால் நல்லவைகளை வளர செய்யும் பலபிரதமணி உருவமாகும்.நான்காவது சந்திரனில் இருந்து கிடைக்கும் காந்த சக்தியை கொண்டு பயிர் பச்சைகளை உயிர் இனங்களை தழைத்தோங்க செய்யும் பலவிகரணி வடிவமாகும்.ஐந்தாவதாக வானத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னில் கலக்க செய்யும் கலவிசரணி உருவமாகும்ஆறாவதாக காற்றில் பிரணவமாய் நிற்கும் காளி, ஏழாவதாக நெருப்பில் வெப்பமாய் நின்று உயிர் வளர செய்யும் ரெளத்திரி,எட்டாவதாக தண்ணீரில் குளிர்ச்சியையும் ஜீவ சக்தியையும் நிலை பெற செய்யும் சேஸ்றா ஒன்பதாவதாக ஐம்பூதங்களையும் ஆட்சி செய்யும் வாமை,கடவுள் கொள்கையின் அடிப்படை அனைத்திற்கும் மேலாக ஒரே சக்திதான் உள்ளது என்றாலும் அது செயல் படும் வகையால் பல சக்தி கூறுகளாக பிரித்து காட்டப்படுகிறது.இதை சிவஞான சித்தியார் தமது சுபக்கம் என்ற நூலில் சக்திதான் பலவோ என்னில் தான் ஒன்றே அநேகமாக வைத்திடும் காரியத்தால் என்று சொல்கிறார். சைவ சமயமும் சாக்த சமயமும் அன்னைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு ஸ்ரீ வைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது சைவத்தில் நவ சக்தியாக வழிப்படப் படும் தேவி வைஷ்ணவத்தில் ஆதிலஷ்மி தனலஷ்மி தானியலஷ்மி சந்தானலஷ்மி மகாலஷ்மி கஜலஷ்மி வீரலஷ்மி விஜயலஷ்மி என்ற அஷ்ட லஷ்மிகலாக போற்றி வணக்கப்படுகிறாள்
திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமான் திருமாலின் சிறப்புக் குறிய சக்தியாக திருமகள் விளங்குவது அனைவரும் அறிந்ததே. தன்னை எப்போதும் விலகாது இருக்க வேண்டும் என்பதற்காகவே தனது அழகிய மார்பில் திருமகளை நாராயணன் குடிவைத்திருக்கிறார்.நாராயணனின் உடம்பில் நாராயணனி எப்படி இடம் பெற்று இருக்கிறாளோ அதே போலவே சிவ பெருமானின் உடம்பிலும் பராசக்தி பாதியாக இடம் பெற்று இருக்கிறாள் இவை எதை காட்டுகிறது என்றால் சிவனுக்கும் நாராயணனுக்கும் தானே மூலம் என்பதை அன்னை சொல்லாமல் சொல்லி நம்மை விளங்க வைக்கிறாள்.ஸ்ரீ வைஷ்ணவத்தில் கூறப்படும் புருஷகார தத்துவ நோக்கில் தெய்வ திருத்தாயாக அன்னை விளங்குவதால் அவள் தாயார் என அழைக்கப்பட்டு தனி சன்னதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறாள்.இது தவிர எம்பெருமான் நாராயணன் எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் திருமகள் கூடவே வருகிறாள் திருமகள் இல்லாத திருமால் இல்லை என்றே சொல்லலாம். சிவனுக்கு பார்வதியாகவும் நாராயணனுக்கு மகாலஷ்மியாகவும் துணை வருகின்ற அன்னை சக்தி படைப்பு கடவுளான பிரம்ம தேவனுக்கு சரஸ்வதியாக துணை வருகிறாள். எப்படி காக்கும் கடவுளின் உடம்பிலும் அழிக்கும் கடவுளின் உடம்பிலும் சக்தி குடிகொண்டு இருக்கிறாளோ அதே போலவே படைக்கும் கடவுளின் திருநாவிலும் அன்னை சக்தி குடிகொண்டு இருக்கிறாள். திருமால் சிவன் இருவருக்கும் ஞான சக்தியாக துணை புரிகின்ற தாயானவள் பிரம்மாவுக்கோ கிரியா சக்தியாக துணை செய்கிறாள். இந்து சமயத்தில் உள்ள ஆறு பிரிவுகள் மட்டும் அல்லாது பெளத்த ஜைன மதங்களிலும் சரஸ்வதி தேவி சிறப்பிக்கப் படுகிறாள். கங்கை நதிக்கு நிகரான புண்ணிய நதியாகவும் அன்னை சரஸ்வதி பவனி வருகிறாள். நதிகளில் உயர்வானது சரஸ்வதி தேவியருள் மகிமை பொருந்தியவள் சரஸ்வதி என்று ரிக் வேதம் இவளை தான் குறிப்பிடுகிறது. வேத கால யாகங்களில் சரஸ்வதி தேவி ஒரு முக்கிய தேவதையாகவும் கருதப்பட்டு வந்தாள்.சரஸ்வதி தேவியின் வழிப்பாடு இந்தியாவில் மட்டும் அல்லாது தீபெத் ஜாவா ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளிலும் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் சரஸ்வதி வழிப்பாடு தனிப் பாரம்பரியம் மிக்கது என்றே சொல்லலாம். சைவ சமய ஞானியான குமரகுருபரருக்கு அன்னை சரஸ்வதி தேவியே கண்கண்ட தெய்வமாகும். அவர் எழுதிய சகலகலாவல்லி மாலையை பாராயணம் செய்தால் அசடன் கூட அறிஞன் ஆவான் என்ற நம்பிக்கை இன்றும் நடை முறையில் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை